Home ஊர் திரிகோணமலை வரைப்படம்

திரிகோணமலை வரைப்படம்

by Dr.K.Subashini
0 comment
இங்கு வழங்கப்படும் இந்த நில வரைப்படம் கி.பி.1464ம் ஆண்டு உருவாக்கப்பட்டதாகும். இதனை வரைந்து உருவாக்கியவர் பெல்லின் (Jacques-Nicolas Bellin).   ‘Carte de la Baye de Trinquemale’  என்ற பெயருடன் உள்ள இந்த வரைப்படம்  அச்சுவடிவில் தாளில் உருவாக்கப்பட்டுள்ளது.   36.6 x 28.9 செ.மீ அளவுடன் இந்த வரைப்படம் காட்சியளிக்கின்றது. இந்த வரைப்படம் காட்டும் நிலப்பகுதி இலங்கையின் வடகிழக்குப் பகுதி மாகாணமாகிய திரிகோணமலையின் ஒரு பகுதியாகும்.
இந்த வரைப்படத்தை உருவாக்கிய பெல்லின் பிரான்சு நாட்டின் பாரிஸ் நகரில் பிறந்தவர். புவியியல் அறிஞர் என்றும் வரைப்பட நிபுணர் என்றும் மிக புகழப்பட்ட இவர் உருவாக்கிய நில வரைப்படங்கள் ஏராளம். இவர் அன்றைய பிரான்சின் மிகுந்த உயர் முக்கியத்துவம் வாய்ந்த தத்துவ அறிஞர்களின் சபையாக விளங்கிய ‘Philosophes’ என்ற அமைப்பில் அங்கத்துவம் பெற்றவர். அக்காலகட்டத்தில் இந்த அமைப்பில் அங்கம் வகித்தவர்களும் தத்துவ மேதை ரூசோ அவர்களும் அடங்குவார்.
பெல்லின் எழுதிய நூல்கள் பெரும்பாலும் கடல் பயணம், புவியியல் ஆகிய துறைகளைச் சார்ந்தவை. அவற்றுள் 15 தொகுதிகள் அடங்கிய உலகின் வெவ்வேறு நாடுகளின் பகுதிகளின் வரைப்படங்கள்  அடங்கிய தொகுப்பு முக்கியத்துவம் பெறுகின்றது.
இந்த நிலவரைப்படத்தில் நாம் இன்றைக்கு 230 ஆண்டுகள் காலவாக்கில்  இலங்கையின் திரிகோணமலை குடாபகுதியைக் காண்கின்றோம். யானைத்தீவு,  தம்பலகம் குடா போன்ற பெயர்களையும் ஏனைய சிறு தீவுகளையும் இந்த வரைப்படத்தில் காண்கின்றோம்.  குடா பகுதியில் ஏராளமான கப்பல்கள் பயணித்துக் கொண்டிருப்பதையும் இந்த வரைப்படம் காட்டுகின்றது. திரிகோணமலைப்பகுதி குடா பகுதி வணிகப் போக்குவரத்து மிகுதியாக இடம்பெற்ற ஒரு பகுதியாக கி.பி. 18ல் இருந்தமைக்கு இந்த வரைப்படம் ஒரு சான்றாகின்றது. திரிகோணமலை பகுதியில் அமைந்துள்ள துறைமுகம் நீண்ட காலங்களாக உலகின் பல பகுதிகளிலிருந்து வணிகம் செய்ய வந்தோர் அறிந்திருந்த முக்கிய வணிகப் பகுதிகளுள் ஒன்று என்றும் கூறலாம்.
திரிகோணமலை பகுதியை பிரஞ்சுக்காரர்கள் தங்கள் கட்டுப்பாட்டில் சில காலங்கள் வைத்திருந்தனர். இக்கடல்பகுதியில் தங்களது முக்கிய வணிக துறைமுக நகரமாக இப்பகுதி விளங்கும் என அறிந்திருந்ததால் ஐரோப்பிய நாடுகளிடையே இப்பகுதியை தங்கள் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரவேண்டும் என்ற போட்டி நிலவியதைக் காண்கின்றோம். பின்னர் பிரித்தானியப்படைகளின் வசம் வந்தது இப்பகுதி.  1957 வரை திரிகோணமலை பிரித்தானியப் படைகளின் கடற்படை தளமாகவும் செயல்பட்டு வந்தது.
இங்குள்ள திருக்கோணேஸ்வரர் சிவாலயம் இலங்கை சைவ மதத்தினர் போற்றி வழிபடும் மிக முக்கியக் கோயில்களில் ஒன்றாகத் திகழ்கின்றது.
குறிப்பு- நோர்வே திரு.வேலழகனின் சேகரிப்பில் உள்ள, ஏலத்தில் வாங்கப்பட்ட ஆவணங்களுள் ஒன்று இந்த வரைப்படம்.
Dr.K.Subashini

You may also like

Leave a Comment